Published : 03 Mar 2023 09:43 PM
Last Updated : 03 Mar 2023 09:43 PM

குட்கா தடை நீக்கம் | தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கோப்புப்படம்

புதுடெல்லி: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இந்த இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், "குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என கோரப்பட்டது, அப்போது நீதிபதிகள் , இந்த வழக்கின் முழுமையான விவரம் தெரியாமல் எப்படி தடை விதிக்க முடியும்? முதலில் வாதங்களை கேட்ட பின்னர் இந்த விவகாரத்தில் முடுவெடுக்கலாம் என தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x