Published : 01 Mar 2023 07:00 AM
Last Updated : 01 Mar 2023 07:00 AM

சென்னை ஐஐடியில் புத்தாக்க வசதி மையம் திறப்பு; புத்தாக்க நிறுவனம் தொடங்குவதில் இந்தியா 3-வது இடம்: ஜெகதீப் தன்கர் பெருமிதம்

அரசுமுறை பயணமாக சென்னை வந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை, சென்னை விமான நிலையத்தில் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உடனிருந்தார்.

சென்னை: புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. விரைவில் முதலிடம் பிடிக்கும் என்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்தநிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் புத்தாக்க வசதி மையம் (Centre for Innovation Facility) கட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கவும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் இங்கு உதவிகள்வழங்கப்படும். இந்த மையத்தைகுடியரசு துணைத்தலைவர் ஜெகதீப்தன்கர் நேற்று திறந்து வைத்தார்.பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:

வலுவான பட்ஜெட் தயாரிப்பு: கடந்த 1989-ல் நாடாளுமன்றஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். 30 கட்சிகள் சேர்ந்து, 30 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சி நடத்திய காலகட்டம் அது. 2014-ல்அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 2019-ல் வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக, நாட்டின் வலுவான பட்ஜெட்டை நம்மால் தயாரிக்க முடிந்துள்ளது.

புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் சிறந்த நாடாக 3-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. விரைவில் முதல் இடத்தை பிடிக்கும். புத்தாக்க நிறுவனங்கள் தொடங்குவதில் நாடு முழுவதும் சமநிலையை கொண்டுவர வேண்டும். சென்னை ஐஐடியில் மட்டுமே 300 புத்தொழில் நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி நிதி பங்களிப்பில் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இந்தியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். 2047-ல் இங்குள்ள மாணவர்கள் பலர் அதுபோல முக்கிய இடங்களில் இருப்பீர்கள். மனித வளத்தில் இந்தியர்களின் சிறந்த சிந்தனையும், ஆற்றலும் உலகை வழிநடத்தும்.

முந்தைய காலங்களில் இருந்ததலைவர்கள் மக்களவை, மாநிலங்களவை போன்றவற்றை எந்த பிரச்சினையும் இல்லாமல் நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது, ஆரோக்கியமான விவாதங்கள் இல்லாமல் கூச்சல், குழப்பம் நிலவுவது வேதனை தருகிறது. பொதுமக்கள் செலுத்தும் பல கோடிரூபாய் வரிப் பணத்தில் நாடாளுமன்றம் இயங்குகிறது. ஆனால், அவையில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதுமக்களுக்கு தெரிவது இல்லை.

தனி நபர்களோ, ஊடகங்களோ தங்கள் கருத்தை வெளியிட முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், நாட்டின் உயர்ந்த அமைப்பான நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 20 ஆண்டுகள் கழித்து, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அந்த விவகாரத்தை மாற்றி திரித்து கூறுவது அரசியல் லாபத்துக்கான செயல்.

விவசாயிகளுக்கு முக்கிய பங்கு: இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் என்று கூறியபோது பலர் கிண்டல் செய்தனர். ஆனால், இன்று நாம் அதை நோக்கியே நகர்ந்து வருகிறோம். நம் வளர்ச்சியில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இன்று பல நாடுகள் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால், அந்த அவசியம் இல்லாத அளவுக்கு உணவு உற்பத்தியில் நாம் வளர்ந்துள்ளோம். மாணவர்கள் அவரவர் எண்ணங்கள், விருப்பங்களின் அடிப்படையில் புதுமையாக தொழில் தொடங்குங்கள். தோல்விகளை கண்டு அஞ்சாதீர்கள். மன அழுத்தத்துக்கு இடம்தராமல் இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றிகிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி ஆகியோர்பங்கேற்றனர்.

1981-ம் ஆண்டு சென்னை ஐஐடியில் படித்தவரும், கேம்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான சங்கர்இந்த புத்தாக்க வசதி மையத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதால், ‘சுதா அண்ட் சங்கர்புத்தாக்க மையம்’ என்ற பெயரில்இது அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் அவரும் கலந்துகொண்டார்.

குடியரசு துணைத் தலைவருக்கு வரவேற்பு: குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு, ஜெகதீப் தன்கர் முதல்முறையாக தமிழகத்துக்கு நேற்று வந்தார். சென்னை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x