Published : 22 May 2017 04:36 PM
Last Updated : 22 May 2017 04:36 PM

நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரிய மனு: சிபிஎஸ்இ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏற்கெனவே நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, ஒரே மாதிரியான மறுதேர்வு நடத்த வேண்டும் என்று திருச்சி மாணவர் தொடுத்த வழக்கில், மே 24-க்குள் சிபிஎஸ்இ இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாணவர் அபி ஷேக் மொகமதுவின் தாய் ரொஹையா ஷேக் மொகமது தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது:

''நீட் தேர்வில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் தேர்வெழுதியவர்களுக்குக் கேள்விகள் ஒரே மாதிரியாகக் கேட்கப்படவில்லை. ஆங்கில வழியில் எழுதப்பட்ட தேர்வில் கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதால் கடினமாக இருந்தன. ஆங்கில வழியில் மாநிலப் பாடத் திட்டத்தைப் படித்த மாணவர்கள் என்ன செய்வார்கள்?

அத்துடன் தமிழகத்தில் ஆங்கில வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஆங்கில வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் வங்க மொழியிலும் ஆந்திர மாநிலத்தில் கேள்விகள் ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் கேட்கப்பட்டிருந்தன.

தமிழ் வழிக் கல்வியிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருந்தன. இது பாரபட்சமானது. தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள் அனைவரும் முழுமையாக சிபிஎஸ்இக்கு மாறவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்த 150 கேள்விகளும் பாரபட்சமாக இருந்தன. இதன்மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்வதும் பாரபட்சமாகவே இருக்கும்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, அனைவருக்கும் சம உரிமை உள்ளதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆங்கில வழியில் எழுதப்பட்ட தேர்வில் கேள்விகள் அனைத்தும் கடினமானதாக இருந்தன. இதனால் இந்தியா முழுக்கவும் ஒரே மாதிரியாக கேள்விகள் அமைக்கப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட வேண்டும். வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவை அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும்''.

இந்த மனு இன்று (திங்கட்கிழமை) நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இதுதொடர்பாக மே 24க்குள் சிபிஎஸ்இ இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x