Published : 22 Feb 2023 07:07 AM
Last Updated : 22 Feb 2023 07:07 AM

வாக்குறுதி அளித்து 14 ஆண்டுகளாகியும் தருமபுரியில் தொழிற்பேட்டை ஏன் அமையவில்லை? - உதயநிதியின் செங்கல் பிரச்சாரத்துக்கு அண்ணாமலை பதிலடி

தருமபுரி தொழிற்பேட்டை தாமதம் குறித்து, ஈரோட்டில் செய்தியாளர்களிடம், செங்கல்லை காட்டி, விளக்கம் அளித்த அண்ணாமலை.

ஈரோடு: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை என செங்கல்லை காட்டி ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். இதற்கு பதிலாக, ‘தருமபுரியில் 14 ஆண்டுகள் ஆகியும், திமுக அறிவித்த தொழிற்பேட்டை அமையவில்லை’ எனக் கூறி, பாஜக தலைவர் அண்ணாமலையும் செங்கல்லை காட்டி விளக்கம் அளித் தார்.

ஈரோட்டில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியஅமைச்சர் உதயநிதி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காட்டியதைப் போலவே, செங்கல் ஒன்றைக் காட்டி, ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை இன்னும் மத்திய அரசு கட்டவில்லை’ எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து அன்று இரவு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு, 2026-ல் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தெளிவுபடுத்தியுள்ளோம். இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு, 150 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் இணைந்து படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்கிறார்.

மத்தியில் பாஜக, தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது, இதுபோன்ற ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கற்களைக் கொண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. அதில், 1,800 ஏழைக் குழந்தைகள் மருத்துவம் படித்து வருகின்றனர். இதை உதயநிதி புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலின்போது, ‘தருமபுரியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்’ என்று திமுக வாக்குறுதி அளித்தது. 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல்கூட திமுக வைக்கவில்லை (செங்கல்லை கட்டினார்). எனவே தேர்தல்முடிந்தவுடன் இந்த செங்கல்லை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026-ம் ஆண்டில் முடிந்தவுடன், அவரிடம் உள்ள செங்கல்லை திருப்பித் தரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x