Published : 20 Feb 2023 04:36 PM
Last Updated : 20 Feb 2023 04:36 PM

விழுப்புரம் ஆசிரமம் வழக்கு: ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

விழுப்புரம் ஆதரவற்றோர் இல்லம் | கோப்புப்படம்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து காணாமல் போனவர்கள் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு ஷபீருல்லா என்ற தனது 70 வயது மாமாவை அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.

சலீம்கான் தனது நண்பர் ஹலிதீன் மூலம், மாமா ஷபீருல்லாவைச் சந்தித்து அவரது நலம் விசாரித்து தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹலிதீன், அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சென்ற போது ஷபீருல்லா அங்கு இல்லை. அவர் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இருப்பதாக ஆசிரமத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பெங்களூரு சென்று பார்த்தபோது, அங்கும் ஷபீருல்லா இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஷபீருல்லாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஹலிதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், "ஷபீருல்லா குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட அன்பு ஜோதி இல்ல நிர்வாகிகள் தர மறுக்கின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தால் அந்தப் புகாரை ஏற்க காவல் துறையினரும் மறுக்கின்றனர்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்து றைக்கு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த பலர் காணாமல் போனது தெரியவந்தது. மேலும், இல்லத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதும், மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அன்பு ஜோதி இல்லத்தை நிர்வகித்து வந்த கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜுபின் மற்றும் மேலாளர் விஜி மோகன் மற்றும் தாஸ், விழுப்புரத்தை சேர்ந்த பூபாலன், தெலுங்கானாவைச் சேர்ந்த சதீஷ் உள்பட 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ஆசிரம நிர்வாகிகள் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஹலிதீன் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஆசிரமத்தில் ஆய்வு செய்துள்ளனர். ஜூபின் பேபி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x