Published : 05 May 2017 03:31 PM
Last Updated : 05 May 2017 03:31 PM

மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது ஏன்?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியர்களின் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது ஏன் என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி மதுக்கடையை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது சிலர் கடையின் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக போலீஸார் 21 பேரை கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசன்னா என்பவரின் தாயார் மரணமடைந்ததால் அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரசன்னா சார்பாக பரோல் கேட்டு மனு அளிக்கபட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசன்னாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். ஆனால் நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு ஆணை வரவில்லை என்று சிறைத்துறை பிரசன்னாவை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் என். கிருபாகரன், பார்த்திபன் ஆகியோரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "சிறைத்துறை நிர்வாகம் ஏன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருமுல்லைவாயில் மதுக்கடை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவர் மீதான வழக்கையும் ரத்து செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடை அமைப்பதே குறிக்கோள்

மேலும் நீதிபதிகள் இது தொடர்பாக கூறும்போது, " மதுக்கடைக்கு எதிராக போராடுபவர்களை மீது ஏன் வழக்குப் பதிவு செய்கிறீர்கள்? யார் ஆட்சிக்கும் வந்தாலும் மதுக்கடைகள் அமைப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு என்பதை அரசு நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x