Published : 18 Feb 2023 03:32 PM
Last Updated : 18 Feb 2023 03:32 PM

“பிரபாகரன் உயிருடன் இல்லை - ஈரோட்டில் திருநாவுக்கரசர் பேட்டி 

திருச்சி எம்.பி. எஸ்.திருநாவுக்கரசர் | கோப்புப் படம்.

ஈரோடு: “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான எஸ்.திருநாவுக்கரசர் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது. அதனால், எனக்கு கிடைத்த தகவலின்படி, பிரபாகரன் உயிருடன் இல்லை.

அரசியலில் நாகரிகமான விமர்சனம் செய்ய வேண்டும். எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும், ஒரு சில குறைபாடு இருக்கத்தான் செய்யும். குறைபாடுகளே இல்லாத ஆளுங்கட்சி என்று எதையும் கூற முடியாது. தமிழகத்தில், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வந்த திருமகன் ஈவெரா மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமகன் விட்டுச் சென்ற பணிகளை இளங்கோவன் தொடர்வார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று அவர் கூறினார். பேட்டியின்போது ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x