Published : 19 May 2017 11:25 AM
Last Updated : 19 May 2017 11:25 AM

ரவுடி கொலையில் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் கைது: கோவில்பட்டியில் பழிக்குப் பழியாக மற்றொரு கொலை

தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், விஜய் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜே.பில்லா ஜெகன் (45). லாரி ஷெட் உரிமையாளரான இவர், விஜய் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவராக உள்ளார். திமுகவில் சிறிது காலம் மாவட்ட இளைஞரணி அமைப் பாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மகள் திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் மகன் சச்சின் (23). கூலித்தொழிலாளியான இவர், அந்த மாணவிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். பில்லாஜெகன் கடந்த இரு தினங்களுக்கு முன் சச்சினை அழைத்துக் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பில்லா ஜெகன் கொடுத்த புகாரின் பேரில், சச்சின் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சச்சின் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் அவரை கடத்திச் சென்றது. அந்த கும்பல் சச்சினை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து, சடலத்தை ஜோதிநகர் காட்டுப் பகுதியில் வீசிச் சென்றது.

இது தொடர்பாக பில்லா ஜெகன், அவரது தம்பிகள் சுமன், சிம்சன் உள்ளிட்ட 8 பேர் மீது தூத்துக்குடி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். இதில் சிம்சன் (30), தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் எடிசன் (27) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, பில்லா ஜெகன், மட்டக்கடையை சேர்ந்த திருச்சிற்றம்பலம், பாலா, வின்னர் கார்த்திக், சின்னத்துரை ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பில்லா ஜெகனின் மற்றொரு தம்பியான சுமன் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சச்சின் மீது தூத்துக்குடி வடபாகம், மத்திய பாகம், சிப்காட் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுபோல, பில்லா ஜெகன் மீதும் தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டி

இதற்கிடையே, கோவில்பட்டி அருகே நேற்று பழிக்கு பழியாக கேபிள் ஆபரேட்டர் கொலை செய்யப்பட்டார். கோவில்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ச.முருகன் (43). கேபிள் ஆபரேட்டரான இவர், இதே பகுதியைச் சேர்ந்த விவசாயி செ.சுப்புராஜ் (57) என்பவர் கடந்த மார்ச் மாதம் கொலையான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த முருகன், கொப்பம் பட்டி போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை வழக்கம் போல் கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு உறவினர் சுப்பையா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

குருவிநத்தம் விலக்கு அருகே வரும்போது, காரில் வந்த ஒரு கும்பல் முருகனை வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டது. சுப்புராஜ் கொலைக்கு பழிக்குப் பழியாகவே இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

காரில் வந்த ஒரு கும்பல் முருகனை வழிமறித்து வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x