Last Updated : 17 Feb, 2023 09:17 AM

2  

Published : 17 Feb 2023 09:17 AM
Last Updated : 17 Feb 2023 09:17 AM

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்தது என்ன?

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.

சலீம்கான் என்பவர், இக்காப்பகத்தில் சேர்க்கப்பட்ட வயதான தனது மாமாவை காணவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, உரிய அனுமதியின்றி இந்த ஆசிரமம் நடைபெற்று வருவது தெரியவந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 99 பேர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மீதம் உள்ள 60 பேர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வளத்தி, கடலூர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் கோட்டக்குப்பத்தில் இந்த ஆசிரமத்தின் கிளையிலிருந்த 25 பேர் மீட்கப்பட்டு, விழுப்புரம் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமம், அரசின் எவ்வித அனுமதியும் இன்றி கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.

இந்த ஆசிரமத்தில் என்னதான் நடந்தது என போலீஸ், வருவாய்த் துறை மற்றும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையினரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் சிறிய கட்டிடத்தில் இயங்கி, தற்போது இந்த ஆசிரமம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆசிரமத்தின் உள்ளே சென்றவர்கள் வெளியே வருவது மிக சிரமம் என்றே தெரிகிறது.

இங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்களை மிரட்டியோ, மயக்கப்படுத்தியோ தங்களின் உடல் இச்சைக்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அங்கு சமையலராக இருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘300க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ளோம்” என்று ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபினின் மனைவி மரியா ஜூபின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனியிடம் கேட்டதற்கு, “குண்டலபுலியூர் ஆசிரம நிர்வாகிகள் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது எழுந்துள்ள புகார்களின் அடிப்படையில் ஆசிரமத்தை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

தென்காசி மாவட்டம், சங்கரன் கோயிலைச் சேர்ந்த நடராஜன் என்பவர், இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட, பார்வையற்ற தன் மாமா மனைவி லட்சுமியம்மாள் (80) மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் முத்துவிநாயகம் (48) ஆகிய 2 பேரை காணவில்லை என்று விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x