டிடிவி தினகரன் நீதிமன்றக் காவல் ஜூன் 12 வரை நீட்டிப்பு

டிடிவி தினகரன் நீதிமன்றக் காவல் ஜூன் 12 வரை நீட்டிப்பு
Updated on
1 min read

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் உள்ளிட்ட 4 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரித்து, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் கொடுத்த வாக்கு மூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப் பட்ட 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா, சுகேஷ், நரேஷ் ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து 4 பேரையும் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் திகார் சிறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேரையும் வருகிற 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நாளை தீர்ப்பு

டிடிவி தினகரன், மல்லிகார் ஜுனா ஆகியோர் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. அதைத் தொடர்ந்து நாளை (31-ம் தேதி) ஜாமீன் மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in