Published : 16 Feb 2023 05:23 PM
Last Updated : 16 Feb 2023 05:23 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்கிற இந்திய தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர். எனவே, மத்திய படைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை பரிசீலிக்கவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் இருமுறை இடம்பெற்றுள்ளது. உயிருடன் இல்லாத 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்களும், இடம் மாறிய 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்களும் நீக்கப்படவில்லை" என்று வாதிட்டார்.

அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபலன், "இரட்டைப் பதிவு உள்ளவர்களின் பட்டியல் தனியாக தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்குசாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பாதுக்காப்பு பணியில் மத்திய காவல் படையை சேர்ந்த 409 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பறக்கும்படையினரும் கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

இடைத்தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்படும். புகைப்பட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்களிக்க, வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர். கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். தங்களால் முடிந்த பணிகளை சிறப்பாக செய்வோம்" என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில், "தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகளை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (பிப்.20) தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x