Published : 16 Feb 2023 04:14 AM
Last Updated : 16 Feb 2023 04:14 AM

தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - முழு விவரம்

கோவை கோட்டைமேடு பி.கே.செட்டி வீதியில், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய இடத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார்.

சென்னை: கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு, மங்களூருவில் நடந்த ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022 அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டிவந்த கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்து 75 கிலோவெடிபொருள், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஜமேஷா முபின் கூட்டாளிகளான முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமதுரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். உயிரிழந்த முபின், சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நபர் என்பதும், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பின்னர், இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் 43 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டுநவம்பரில் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, கைதான முகமது அசாருதீன், பைரோஸ் உள்ளிட்ட 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் சமீபத்தில் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை தொடங்கி ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அதிகபட்சமாக கோவையில் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு வின்சென்ட் சாலை, பி.கே.செட்டி வீதி, குனியமுத்தூரில் உள்ள பிருந்தாவன் சர்க்கிள், வசந்தம் நகர், பாரத் நகர் உட்பட 14 இடங்களில் எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருப்பூரில் ராமு காலனியை சேர்ந்த முகமது ரிஸ்வான் (40), நல்லூர் திருநகரை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (41) ஆகியோரை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சென்னையில் மணலி தென்றல் நகரில் நியமத்துல்லா (32) என்பவரது வீட்டில் சோதனை நடந்தது. அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.. சென்னையில் மணலி, மண்ணடி உட்பட3 இடங்களில் சோதனை நடந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உமரிகாட்டேஜ் பகுதியை சேர்ந்த பெயின்டர் ஹர்சத், ஓட்டுப் பட்டறை பகுதிஆட்டோ ஒட்டுநர் முகமது ஆகியோரது செல்போன்களை என்ஐஏஆய்வாளர் சஜ்ஜன் சிங் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணைக்காக அவர்களை கோவை முகாம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கூறியுள்ளனர்.

திருச்சி பீமநகர் நியூ ராஜா காலனியில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஷேக் தாவூத் (35) வீட்டில் என்ஐஏவுடன் மத்திய உளவுப் பிரிவு(ஐ.பி.) அதிகாரிகளும் சோதனை நடத்தி, லேப்டாப், செல்போன், ஆவணங்களை கைப்பற்றினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த வடகரையை சேர்ந்த முசாகுதீன், அவரது மகன்முகமது பைசல் இருவரும் மஸ்கட்டில் பணியாற்றுகின்றனர். இங்கு உள்ள அவர்களது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

திருநெல்வேலி அடுத்த கரிக்காதோப்பு பகுதியில் வசிக்கும் அன்வர்தீன், ஏர்வாடி கமாலுதீன், தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் அப்துல் அஜீஸ், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஆரிஷ்கான், நாகர்கோவில் அருகே இசங்கன்விளையில் வசித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த காஜா முகைதீன் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது.

இதேபோல, மங்களூரு ஆட்டோகுண்டுவெடிப்பு தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நீலசந்திரா, பேட்ராயனபுரா பகுதிகளில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையவர்கள் என சந்தேகிக்கும் 6 பேரின் வீடுகளில் சோதனை நடந்தது. இதில் செல்போன், லேப்டாப், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மைசூருவிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவ்வாறு 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கார் சிலிண்டர் வெடிப்புதொடர்பாக 32 இடங்கள், மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக 8 இடங்கள் என தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 40 இடங்களில் சோதனைநடத்தப்பட்டது. இதில், ஏராளமான டிஜிட்டல் கருவிகள்,ரூ.4 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x