Published : 15 Feb 2023 02:27 PM
Last Updated : 15 Feb 2023 02:27 PM

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பெரம்பூரைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர், தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்ள் வெளியாகும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கில், தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சோதனை நடத்தப்பட்டு , கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் தொடரும். சினிமா டிக்கெட் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு கண்காணிப்பு தொடர வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x