Published : 08 Feb 2023 06:43 AM
Last Updated : 08 Feb 2023 06:43 AM

தமிழக காவல்துறையில் புதிதாக 17 டிஎஸ்பிக்கள், 444 உதவி ஆய்வாளர்கள்: பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

தமிழக காவல் துறையில் டிஎஸ்பிக்களாக பணி நியமன ஆணை பெற்ற 17 பேருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திரரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் சீமா அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள்.

சென்னை: அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 17 டிஎஸ்பிக்கள் மற்றும் 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தின், அமைதியைப் பேணி பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அங்கு வசிக்கும் பெண்களின் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம் என்பதற்கேற்ப, மகளிருக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் மகளிர் மேம்பட மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம்அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதனால், பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட17 பேரில், 13பேர் பெண்கள். இவ்வாறு புதிதாகதேர்வு செய்யப்பட்ட 17 துணை கண்காணிப்பாளர்களுக்கு தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதேபோல், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 311 ஆண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 133 பெண் காவல்உதவி ஆய்வாளர்கள் என மொத்தம்444 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் வண்டலூர், தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறை செயலர் க.பணீந்திரரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் சீமா அகர் வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x