Published : 06 Feb 2023 11:32 AM
Last Updated : 06 Feb 2023 11:32 AM

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்: முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதத்தை பார்வையிட அமைச்சர் குழுவினர் இன்று (ஜன.6) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் பிப்.1-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மிதக்கின்றன. இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு வேளாண் துறையால் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் 41,000 ஏக்கர், உளுந்து 1,600 ஏக்கர், நிலக்கடலை 1,200 ஏக்கர் மழைநீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், 18 ஆயிரம் ஏக்கர் உளுந்து, 2,170 ஏக்கர் கடலை பயிர்களும், நாகை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், 30 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது வேளாண் துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

எனவே, மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஈரப்பத அளவை 22 சதவீதம் வரை உயர்த்தி, நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வேளாண் துறை செயலர், இயக்குநர் மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று (பிப்.5) பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (பிப்.6) மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்தித்து வருகின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவது, இழப்பீடு வழங்குவது குறித்தும், உரிய மேல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x