Published : 03 Feb 2023 01:47 PM
Last Updated : 03 Feb 2023 01:47 PM

ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தகவல்

ஈரோடு கிழக்குத் தொகுதி ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளருக்கான தேர்தல் பணிமனையை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டியளித்தார்

ஈரோடு: அண்ணாமலையின் சந்திப்பிற்கு பின், இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வேட்புமனு தாக்கல், 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர் செந்தில் முருகன் இன்று (ஜன.3) வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ். தென்னரசு அறிவிக்கப்பட்டார். அவர் இன்று (ஜன.3) வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை - இபிஎஸ் சந்திப்பிற்கு பிறகு, மனுத்தாக்கல் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியின் தேர்தல் பணிமனையில், தேசிய ஜனநாய (க விடுபட்டுள்ளது) கூட்டணி பாசறை கூட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஒருபுறம் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் முழு உருவப் படங்களும், மறுபுறம் பிரதமர் மோடி, ஓபிஎஸ் படங்களுடன், வேட்பாளர் படமும் இடம் பெற்றுள்ளது.

இதோடு, பெரியார், காயிதேமில்லத், அம்பேத்கார், முத்துராமலிக்கத் தேவர், தீரன் சின்னமலை, காமராஜர் ஆகியோரின் படங்களுடன், பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஏ.சி.சண்முகம், தனியரசு, ஜான் பாண்டியன் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் படங்களும் உள்ளன. பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் படங்கள் இடம்பெறவில்லை.

இதுகுறித்து தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது" தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் படங்கள் தேர்தல் பணிமனையில் இடம் பெற்றுள்ளன. இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும். எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் வரவேற்போம். பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாக்கு கேட்க வருவார்களா என்பது அவர்கள் விருப்பம். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்து விட்டார். எனவே, ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். எங்களது வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x