Last Updated : 26 Jan, 2023 04:49 PM

8  

Published : 26 Jan 2023 04:49 PM
Last Updated : 26 Jan 2023 04:49 PM

அனைத்து மீறல்களிலும் ஈடுபடுகிறது தெலங்கானா அரசு: தமிழிசை காட்டம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.

புதுச்சேரி: தெலங்கானா அரசு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஆளுநரை எதிர்க்கிறது. இது எனக்கு புளித்துவிட்டது. மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலத்தில் ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றினார். பின்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது..

''தெலங்கானா முதல்வர் என்னை புறக்கணிப்பது என்பது பழக்கமாகவே போய்விட்டது. இதனால் இது புதிதாக தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை தந்த அம்பேத்கர் யாருடைய உரிமை மறுக்கப்பட்டாலும், அவர்கள் வழக்காடு மன்றத்துக்கு சென்று உரிமையை பெறுவதுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தெலங்கானாவில் குடியரசு தின விழாவை குறைத்து மதிப்பிட்டு, அரசாங்க விழாவாக நடத்தாமல், அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராமல், அவர்கள் எங்கும் கொடி ஏற்றாமல் செயல்பட்டனர். பொதுமக்களில் ஒருவர் வழக்காடு மன்றம் சென்றதால், உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். புதுச்சேரியை போல் குழந்தைகள், கலைஞர்கள், பொதுமக்கள் பங்களிப்போடு விழாவை நடத்த வேண்டும். மத்திய அரசு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதை தெலங்கானா அரசு பின்பற்றவில்லை என்று பொது நலவழக்கு போட்டார்.

இந்த வழக்கில் தெலங்கானா அரசுக்கு கடுமையான கண்டத்தை தெரிவித்து, குடியரசு தினவிழாவை முழுமையாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நேரம் குறைவாக இருந்ததால் அரசால் குடியரசு தினவிழாவை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துவிட்டது. என்னால் தேசியகொடிக்கு என்ன மரியாதை செய்ய முடியுமோ, அதை செய்துவிட்டு சிறப்பாக செயல்பட்ட 6 பேருக்கு விருது வழங்கினேன். அதேபோல் தமிழக முதல்வரிடம் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. தெலங்கானா ஆளுநர் மாளிகையில் குடியரசு தினவிழா நடத்தியதற்கான காரணத்தை தெலங்கானா முதல்வரிடம்தான் கேட்க வேண்டும்.

மரபு மீறல், அரசியலமைப்பு சட்டமீறல் என அனைத்து மீறல்களிலும் தெலங்கானா அரசு ஈடுபட்டுள்ளது. இகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பரேடு மைதானத்தில் குடியரசு தினவிழாவை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. இதற்கு கரோனா பரவலை காரணமாக கூறியிருப்பது நகைப்புக்குரியதாகும். ஆனால், சமீபத்தில் 5 லட்சம் பேரை கூட்டி தெலங்கானா முதல்வர் கூட்டம் நடத்தி இருக்கிறார்.

என்னிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்தை பயன்படுத்தினால் உடனே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் கவர்னர் அதிகாரம் செலுத்துகிறார் என்கிறீர்கள். அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்றால், கவர்னர் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள். தெலங்கானா மக்கள் உண்மையிலேயே என்மீது பாசம் வைத்துள்ளனர். சமூக வலைதளங்களை பார்த்தால் தெரியும் எனக்கு தெலங்கானா மக்கள் எவ்வளவு ஆதரவு தெரிவித்து உள்ளார்கள் என்று.

தெலங்கானா அரசு மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக கவர்னரை எதிர்க்கிறது. இது எனக்கு புளித்துவிட்டது. இதை பற்றி எனக்கு கவலையும் இல்லை. ஆளுநர்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று கேட்கிறார்களே தவிர, முதல்வர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று ஏன் கேட்க மறுக்கிறார்கள். ஒரு பக்கமே கேள்வி இருந்துவிடக்கூடாது. நான் சும்மா சென்றுவிட்டு வரவில்லை. கடுமையாக உழைக்கிறேன். இதை புரிந்து கொள்ள வேண்டும்.

தெலங்கானா அரசு விதிமீறல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து என்னால் கூற முடியாது. தெலங்கானாவில் எந்த ஆட்சியர், எந்த எஸ்பி என்னை வரவேற்கவில்லை என்ற தகவலை மாதந்தோறும் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து விடுவேன். நானே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவர்களது வாழ்க்கையை கெடுக்கக் கூடாது என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை.

புதுச்சேரி குறித்து அமைச்சர்களிடம் கேளுங்கள்: இனிமேல் புதுச்சேரியை பற்றி எந்த கேள்வி கேட்டாலும், அதை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேளுங்கள். நான் பதில் சொன்னால் அனைத்தையும் நானே செய்வதுபோல் தவறான தோற்றம் வருகிறது. நான் சாதாரண ஆள். கோப்புகளுக்கு மட்டும்தான் கையெழுத்து போடுகிறேன். இதற்கு முன்பு இருந்த கவர்னர் மக்களுக்கான திட்டங்களுக்கு கூட தடை போட்டார். நான் மக்களுக்கு ரூ.1000 ஆயிரம் வழங்குவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு அலசி ஆராய்ந்து ஒப்புதல் அளித்தேன்'' என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x