Published : 04 Dec 2016 10:17 AM
Last Updated : 04 Dec 2016 10:17 AM
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசேரியன் மூலம் குழந்தை பிரசவித்த பெண் கோமா நிலைக்குச் சென்றார். ரத்த வகை மாற்றி ஏற்றியதால் பாதிப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த செருவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜன். இவரது மனைவி கமலா(39). திருமணமாகி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த கமலா, கடந்த 9 மாதங்களுக்கு முன் கருத்தரித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 23-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கமலாவுக்கு, அக்டோபர் 25-ம் தேதி சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின், 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
பின்னர், அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட தையலை பிரிக்க அழைத்துச் செல்லப்பட்ட கமலா கோமா நிலைக்குச் சென்றுள்ளார். கடந்த 45 தினங்களாக அவர் மருத்துவக் கல்லூரி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ரத்த வகையை மாற்றி ஏற்றப்பட்டதாலேயே கமலா கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக, அவரது கணவர் நாகராஜன் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து நாகராஜன் கூறும் போது, “நன்னிலம் அரசு மருத்துவ மனையில் கமலா பரிசோதனை செய்துகொண்டபோது, ‘பி நெகட்டிவ்’ வகை ரத்தம் என்று சான்றிதழ் கொடுத்தனர். ஆனால், அவருக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பி பாசிட்டிவ்’ வகை ரத்தத்தை மாற்றி ஏற்றிவிட்டனர். இதன் காரணமாகவே கமலா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்” என்றார்.
ஆனால், இதை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரத்த வகை சரியாக ஏற்றப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் வரும் பெரிபார்ட்டம் கார்டியோ மயோபதி (peripartum cardiomyopathy) என்ற மாரடைப்பு தொடர்பான பிரச்சினை உள்ளதால் இந்த நிலை உள்ளது” என தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல் ராஜ் கூறியபோது, “இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு இருக்கும்பட்சத்தில் உரிய வர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT