

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்ததால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது. இதனால் விலை வீழ்ச்சியடைந்தது.
25 கிலோ கொண்ட பெட்டி ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையானது. இதனால் அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தக்காளி வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையின்போது 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500 வரை விற்பனையான நிலையில் தற்போது மேலும் விலை உயர்ந்துள்ளது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி பகுதி தக்காளி மார்க்கெட்களில் நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.600 முதல் ரூ.650 வரை விற்பனையானது. விலை உயர்வால் தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.