Last Updated : 22 Dec, 2016 09:13 AM

 

Published : 22 Dec 2016 09:13 AM
Last Updated : 22 Dec 2016 09:13 AM

பீனிக்ஸ் பறவை போல புத்துயிர் பெறும் தனுஷ்கோடி: இன்று புயலால் அழிந்த 52-வது நினைவு தினம்

புயலில் அழிந்து 52 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், பீனிக்ஸ் பறவைபோல புத்துயிர் பெறத் துவங்கியுள்ளது தனுஷ்கோடி.

சங்ககாலம் தொட்டு தனு ஷ்கோடி, தமிழகத்தின் பிரதான துறைமுகமாக இருந்துள்ளது. சங்ககால புலவரான கடுவன் மள்ளனார் இயற்றிய சங்கநூலான அகநானூறு தொகுப்பில் இருக்கும் 70-வது பாடலில் பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன் முதுகோடி என்று தனுஷ்கோடியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்கோபோலோ, இபுனு பதுதா போன்ற புகழ்பெற்ற யாத்ரீகர்கள் தங்கள் பயணக் குறிப் புகளில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நடந்த முத்துக் குளித்தலை பற்றி குறிப்பிட்டுள்ளனர். தனுஷ் கோடியில் இருந்து தலைமன்னார், யாழ்ப்பாணம், கொழும்புக்கு தினசரி தோணி படகுகளின் போக்குவரத்து 15-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடைபெற்று வந்துள்ளது.

சென்னையில் இருந்து தனுஷ் கோடிக்கு ரயில் போக்குவரத்து- தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக் குவரத்து, தலைமன்னாரில் இருந்து மீண்டும் கொழும்புக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். இதன் மூலம் மன்னார் மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு, 1914 பிப்ரவரி 24-ம் தேதி போட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

தனுஷ்கோடிக்கும், தலைம ன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண் டான 1964 டிசம்பர் 17-ல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புயல் சின்னம் உருவானது.

டிச. 19-ல் அது புயலாக உருவெடுத்து டிச. 22-ல் இலங்கையை கடந்து 280 கி.மீ. வேகத்தில் இரவு 11 மணிக்கு மேல் தனுஷ்கோடிக்குள் புகுந்தது.

புயலுக்கு முன்னர் ராமேசு வரத்தில் இருந்து தனு ஷ்கோடிக்கு சென்ற போட் மெயில் ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இன்ஜினின் இரும்புச் சக்கரங்களை மட்டுமே. மற்றவை அனைத்தையும் கடலுக்குள் புயல் இழுத்துச் சென்றது. ரயிலில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். தனுஷ்கோடியில் வசித்த ஆயிரக்கணக்கான மீனவ மக்களும் பலியாயினர்.

தனுஷ்கோடியில் துறைமுகம், படகுத்துறை, ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், மருத்துவமனை, கோயில், தேவாலயம், இஸ்லாமியர் அடக்கஸ்தலம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பெரிய கட்டிடங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்தன.

புயல் தாக்கி 52 ஆண்டுகள் ஆன நிலையில் பீனிக்ஸ் பறவை போல தற்போது புத்துயிர் பெறத் துவங்கியுள்ளது தனுஷ்கோடி.

“ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ் கோடி க்கும், தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனைக்கும் இரண்டு கட்டமாக 9.5 கி.மீ நீளத்திற்கு ரூ.56 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரிச்சல்முனையில் மன்னார் வளைகுடாவும், பாக். ஜலசந்தி கடலும் சந்திக்கும் இடத்தில் இரண்டு கி.மீ நீளத்துக்கு ரூ. 11 கோடியில் அலை தடுப்பு கல்சுவர் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கி உள்ளன.

தனுஷ்கோடியில் புயலால் அழிந்த பழைய கட்டிடங்களை பழமை மாறாமல் ரூ. 3 கோடி செலவில் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத் துள்ளது.

மீன்வளத்துறை சார்பாக தனுஷ்கோடி பாலம் பகுதியில் ரூ. 8 கோடியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையிலுள்ள கடல் வாணிப அமைச்சகம் மூலம் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திடும் வகையில் முகுந்தராயசத்திரம் அருகே புதிதாக கலங்கரை விளக்கம் அமைத்திட இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனுஷ்கோடி யிலேயே பிறந்து வளர்ந்த குமார் என்பவர் கூறியதாவது

தனுஷ்கோடியில் மருத்துவம், குடிநீர், சாலை, மின்சாரம் உள் ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில், 200-க்கும் மேற்பட்ட குடிசைகளில் மீனவர்கள் வசித்து வருகிறோம். தற்போது சுற்றுலா வசதிகளை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் இங்கு வாழும் மீனவ மக்களை மாவட்ட நிர்வாகம் கடற்கரையை விட்டு அகதிகளாக துரத்த முயற்சித்து வருகிறது.

தனுஷ்கோடியின் அடையா ளமான மீனவ மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x