Published : 18 Jan 2023 04:07 PM
Last Updated : 18 Jan 2023 04:07 PM

ஜீவனாம்ச வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: பராமரிப்புத் தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறித்த காலத்துக்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டுமென குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகனிடம் இருந்து பராமரிப்புத் தொகை கோரி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிலுவையில் உள்ள நிலையில் தாய் - தந்தைக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் வழங்க 2018-ம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அந்த தம்பதியின் மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "பராமரிப்புத் தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை குறிபிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில் 2014-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருவதற்கு அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், பராமரிப்புத் தொகை மற்றும் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை குறித்த காலத்துக்குள் குடும்ப நல நீதிமன்றங்கள், விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். இடைக்கால உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும, இந்த வழக்கை மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, மேலும் கால அவகாசம் நீட்டிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x