Last Updated : 17 Jan, 2023 04:45 PM

1  

Published : 17 Jan 2023 04:45 PM
Last Updated : 17 Jan 2023 04:45 PM

அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு: உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

அமைச்சர் பொன்முடியின் தம்பி தியாகராஜன் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம்: தமிழக அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் தம்பியும், புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவருமான தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் இளைய சகோதரரும் பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். தியாகராஜன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானார். அவரது உடல் விழுப்புரம் காந்தி சிலை அருகில் மரகதம் மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

இத்தகவல் அறிந்த அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வ.வேலு, மா.சுப்ரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், எம்.பிக்கள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, ரவிக்குமார், சி.வி.சண்முகம், துணை சபாநாயகர் பிச்சாண்டி, எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சக்கரபாணி, முன்னாள் எம் எல் ஏ செந்தமிழ் செல்வன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த மருத்துவர் தியாகராஜனிடம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலில் விழுப்புரம் வந்து சிகிச்சை பெற்றார். அவரும், அவரது தாய் அற்புதம்மாள் உள்ளிட்டவர்களும் தியாகராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அமைச்சர் பொன்முடி, அவரது குடும்பத்தாருக்கும் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையிலும், அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறுநீரக தலைமை மருத்துவ பேராசிரியராக இருந்து சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி டாக்டர். பத்மினி, மகப்பேறு மருத்துவ நிபுணராக உள்ளார். இவருக்கு டாக்டர்.திலீபன், டாக்டர். சிட்டி பாபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவருடன் பிறந்தவர்கள் க.பொன்முடி, க.நடன சிகாமணி, வைஜயந்தி மாலா, மல்லிகா, டாக்டர். க.இராஜ சிகாமணி, அக்ரி க.கோபி சிகாமணி. இன்று மாலை விழுப்புரம், மருதூர், பவர் ஆபிஸ் சாலையில் அமைந்துள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x