Published : 15 Jan 2023 01:03 PM
Last Updated : 15 Jan 2023 01:03 PM

காணும் பொங்கல் விழா | சென்னையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

கோப்புப்படம்

சென்னை: பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ''17.01.2023 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசாம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் காணும் பொஙகல் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை): சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் முக்கியமான இடமாக கருதப்படும் மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள மணற்பரப்பிலும் காவல் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை (Temporary Mini Control room) அமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை மணற்பரப்பில், உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை இங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மேலும், மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 140க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

கடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மணற்பரப்பில் 15 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு கையடக்க வான் தந்தி கருவி (Walky Talky), மெகா போன், பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு வாட்சப் குழு (WhatsApp Group) அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பைனாகுலர் மூலம் காவல் ஆளிநர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும், வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்குவார்கள். மேலும் 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளி திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் காவல் ஆளிநர்கள் மூலம் கண்காணிக்கப்படுவர். மேலும், ஆயுதப்படையின் குதிரைப்படையுடன் கூடுலாக 16 குதிரைகள் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 All Terrain Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து வரப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுவர். சிறிய அளவிலான நான்கு சக்கர வாகனங்களில் (Elevator Vehicle Picket) காவல் ஆளிநர்கள் மூலம் ஒலி பெருக்கியில் பாதுகாப்பு குறித்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இது மட்டுமின்றி சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மற்றும் காவல் ஆளிநர்களால் சர்வீஸ் சாலை மற்றும் இதர பகுதிகளில் ரோந்து சுற்றி கண்காணிக்கப்படும்.

இந்த வருடம் மெரினா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் காவல் உதவி மையங்களை ( Solar Powered Out Post) இரவு நேரங்களில், பொது மக்கள் எளிதாக அடையாளம் கண்டு காவல் உதவி பெறவும், காணும் பொங்கலன்று பொதுமக்கள் அதிகளவில் கூடும் போது, பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், அவசர தேவைக்கு பொதுமக்கள் எளிதாக காவல் உதவி மையத்தை அணுகவும், கூட்ட நேரங்களில் காணாமல் போகும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுப்பிடிக்கவும் இந்த காவல் உதவி மையங்கள் (Solar- Powered Out Post) முக்கிய பங்காற்றும்.

கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் (Anti Drowning team) இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு காவல் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், புதிதாக துவங்கப்பட்டுள்ள காவல் கண்காணிப்பு கோபுரம் (Police Watch Tower) மூலம் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபவர். 4 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் 2 All Terrain Vehicle, சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும். மீட்புப் பணி மற்றும் மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினர் அடங்கிய ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வீரர்கள் கொண்ட தீயணைப்பு வாகனம், அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த 10 தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவர்.

குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை: கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலுள்ள 11 காவல் உதவி மையங்கள் மற்றும் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை தற்காலிக காவல் கட்டுப்பாட்டறையில் வைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் இங்கு நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

டிரோன் கேமராக்கள்: மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 2 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, சமூக விரோதிகள் மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்காணிப்படும். மேலும், அதிக திறன் கொண்ட Heavy weight Drone Camera பயன்படுத்தப்பட்டு, கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும். சிறப்பம்சமாக 2 பெரிய அளவிலான திறன் மிகுந்த VTOL Drone கேமராக்கள் மீட்பு பணியில் பயன்படுத்தப்படும்

இதர பாதுகாப்பு ஏற்பாடுகள்: காணும் பொங்கலை முன்னிட்டு முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு காணும் பொங்கலன்று பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரை மற்றும் தேவையான உதவிகளை வழங்குவார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்களில் சென்று வர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள் (Malls) மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி காணும் பொங்கல் விழாவை சீரும் சிறப்புமாக கொண்டாட தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x