Published : 12 Jan 2023 06:51 AM
Last Updated : 12 Jan 2023 06:51 AM

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஆளுநருக்கு எதிராக ஜன.19-ல் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் சார்பில் ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே 234 தொகுதிகளிலும் தலா 100 காங்கிரஸ் கொடிகளை ஏற்றும் பணி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் ஜன.26-ம் தேதி தொடங்கி 2 மாத காலத்துக்கு ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்; கையோடு கைகோர்ப்போம்’ என்ற பிரச்சார இயக்கத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே எதிர்ப்பு: காவல் துறை மற்றும் உளவு பிரிவு பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே எதிர்ப்பு தெரிவித்தேன். அதை 100 சதவீதம் நிரூபிக்கும் வகையில் சட்டப்பேரவையில் அவர் நடந்துகொண்டார்.

தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே பேரவையைவிட்டு வெளியேறியுள்ளார். அவரது ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அவருக்கு எதிராக வரும் 19-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரியங்கா தலைமையில் பேரணி: பிரச்சார இயக்கத்தின் மேலிட பார்வையாளர் கொடிக்குன்னில் சுரேஷ் கூறியபோது, ‘‘கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று, ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயண நோக்கம், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்து விளக்க இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர்பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இக்கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செயலாளர் சிரிவெல்ல பிரசாத், மாநில துணை தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x