Published : 09 Jan 2023 08:46 PM
Last Updated : 09 Jan 2023 08:46 PM

மாரிதாஸ் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்த ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

யூடியூபர் மாரிதாஸ் | கோப்புப் படம்

புதுடெல்லி: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில் மரணம் அடைந்தார். அந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருகிறது என்று பதிவிட்டிருந்தார். தமிழகத்தின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டு அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது மதுரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மாரிதாஸை சமூக வலைதளத்தில் 2 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் நன்கறிந்தே ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்தது செல்லாது எனக் கூறி மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு காவல் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “இந்த வழக்கில் எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதிலளிக்கவில்லை. மேலும் காவல் துறையின் புலன் விசாரணைக்கு உரிய கால அவகாசம் வழங்காமல், எதிர்மனுதார் மீதான கிரிமினல் வழக்குகள் 4 நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவதூறு பரப்பியதாக கடந்த 9.12.2021-ல் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை ரத்து செய்ய மாரிதாஸ் 10.12.2021-ல் மனு தாக்கல் செய்துள்ளார். அதனை அவசரமாக விசாரித்த உயர் நீதிமன்றம் 14.12.2021 அன்று அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது.

மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக புலன் விசாரணையை நடத்த தமிழ்நாடு காவல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உரிய கால அவகாசம் கொடுக்கவில்லை. உயர் நீதிமன்றத்தின் இந்த செயல் அதிருப்தி அளிக்கிறது. எனவே, வழக்கின் தன்மையை கருதி காவல் துறையினர் புலன் விசாரணை நடத்த ஏதுவாக மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டு இந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x