Published : 09 Jan 2023 03:19 PM
Last Updated : 09 Jan 2023 03:19 PM

மனநலம் பாதித்தோருக்காக அரசு நிதியுதவியுடன் தமிழகம் முழுவதும் 55 மறுவாழ்வு மையங்கள்: அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தொடர்பாக 2021-ம் ஆண்டு செப்டம்பரில் அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால், அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே அந்த மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், "மனநலம் பாதித்து சாலையில் திரிபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை கூட அரசு அறிவிக்கவில்லை" என குற்றம்சாட்டினார்.

அப்போது அரசு தரப்பில் ப்ளீடர் முத்துக்குமார் ஆஜராகி, "தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதித்தவர்களுக்காக 55 மறுவாழ்வு மையங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. குணமடைந்தவர்களுக்கு கன்னியாகுமரி, வேலூர், ராமநாதபுரம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் 5 இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவிப்பது குறித்து விளக்கமளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x