Published : 18 Dec 2016 10:32 AM
Last Updated : 18 Dec 2016 10:32 AM

பிடிஎஸ் படிப்புடன் எம்பிபிஎஸ்: பல் மருத்துவ கவுன்சில் பரிந்துரை - மத்திய அரசுக்கு அனுப்பியது

பிடிஎஸ் படிப்புடன் எம்பிபிஎஸ் படிப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் மஜூம்தார் தெரிவித்துள்ளார்.

தாகூர் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சர்வதேச பல் மருத்துவ கல்லூரிகளின் மாநாடு (ஐசிடி) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடந்தது. ஐசிடியின் இந்தியா, நேபால், இலங்கை 6-வது பிரிவின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி மாநாட்டுக்கு தலைமைத் தாங்கினார். தாகூர் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் எம்.மாலா, முதல்வர் டாக்டர் சித்ரா ஆர்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் மஜூம்தார் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

மருத்துவம் சமுதாயப் பணியாக செய்யப்படுகிறது. நாடுமுழுவதும் 70 சதவீதம் பல் டாக்டர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புறங்களில் பல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பல் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு படிக்கும் மாண வர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். பல் மருத்துவத்தில் புதிய விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

பல் மருத்துவம் படித்தவர்கள் சொந்தமாக கிளீனிக் தொடங்குவதற்கு தேவையான உதவிகளை பல் மருத்துவக் கவுன்சில் செய்யும். பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புடன் மேலும் 3 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்பதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் பிடிஎஸ் படிக்கும் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பையும் படிக்கலாம். மாணவர்கள் ஒரே நேரத்தில் பிடிஎஸ், எம்பிபிஎஸ் பட்டத்தை பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் பல் டாக்டர்கள், பல் மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பலர் கலந்துக் கொண்டனர். இன்று பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x