

நாமக்கல்: மோகனூரில் பட்டாசு வெடித்த விபத்தில் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மோகனூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் தில்லைகுமார் (35). இவரது வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசு நேற்றுமுன் தினம் வெடித்ததில், 6 வீடுகள் தரைமட்டமானது. 60-க்கு மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இதில், தில்லைகுமார், அவரது மனைவி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தால் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்த் துறை மூலம் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சேதமடைந்த வீடுகள் தொடர்பாக வட்டாட்சியர் ஜானகி தலைமையில் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வீட்டின் மதிப்பு, எத்தனை சதவீதம் சேதம் அடைந்துள்ளது, சேதமடைந்த பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர்.