Published : 22 Dec 2022 06:34 PM
Last Updated : 22 Dec 2022 06:34 PM

காவல் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: சிறு தவறுகளுக்காக காவல் துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான சாரதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "லாக்கப் மரணம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சிறு தவறுகளுக்காக காவல் துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அரசாணை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு காவல் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தாகும். மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே காவல் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடும் அரசின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்" மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பணி தொடர்பான விவகாரங்களில் எவ்வாறு பொது நல வழக்கு தொடர் முடியும்? என கேள்வி எழுப்பினர்.பின்னர், விளம்பர நோக்கத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x