Published : 22 Dec 2022 06:23 PM
Last Updated : 22 Dec 2022 06:23 PM

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு உறுதி: பழனிவேல் தியாகராஜன்

டெல்லியில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

புதுடெல்லி: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கோப்புகள், கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் எல்லாம் வந்துள்ளதாகவும், அந்தப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்தேன். அவரிடம், மதுரை விமான நிலையத்தைப் பொறுத்தவரைக்கும் இரண்டு, மூன்று கோரிக்கைகளை வைத்தேன். மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த நடவடிக்கை எடுத்து, சர்வதேச விமானங்களை கூடுதலாக இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தேன்.

அப்போது மத்திய அமைச்சர், அவராகவே முன்வந்து, பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கோப்புகள், கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் எல்லாம் வந்துள்ளன. அந்த பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்தார்" என்று கூறினார்.

முன்னதாக, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக செல்ல முயன்ற கிராம மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் குழுவுடன் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழுவினர், தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x