Published : 21 Dec 2022 03:11 PM
Last Updated : 21 Dec 2022 03:11 PM

தமிழ் கட்டாய பாடச் சட்டம் அமல் தொடர்பாக ஆய்வறிக்கை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம் அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ராகவன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழகத்தில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி 2006-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015- 16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழாசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளன. 2015-16 ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட பாடத் திட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளைக் கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. தமிழ் கட்டாய பாடச் சட்டத்தில் அதுபோல எந்த பிரிவுகளும் இல்லை. இதனால் இந்த சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த முடியவில்லை. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாததால், 2022-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 47 ஆயிரத்து 55 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர். எனவே, தமிழ் கட்டாய பாட சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x