Published : 19 Dec 2022 05:51 AM
Last Updated : 19 Dec 2022 05:51 AM

நீர்வரத்து குறைவால் பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு; விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைப்பு

திருவள்ளூர்: நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநில அணைகளான பிச்சாட்டூர் மற்றும் கிருஷ்ணாபுரம் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மேன்டூஸ் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து, 5 நாட்கள் பெய்தமழை தற்போது ஓய்ந்தது. இந்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 9-ம் தேதி முதல், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதில், பூண்டி ஏரியில் விநாடிக்கு100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்தின் அளவை பொறுத்து, கடந்த 10-ம்தேதி இரவு 8 மணி முதல், படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்படி, வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கடந்த 11-ம் தேதி காலை விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இச்சூழலில், கடந்த 14-ம் தேதி காலை 8.30 மணியளவில் பூண்டி ஏரிக்கு வரும் நீர் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக இருந்தததால், அன்று காலை 9 மணியளவில், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. பிறகு, கடந்த 15-ம் தேதி காலை 9 மணி முதல்,விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரிநீர், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,500 கனஅடியாக குறைந்தது. ஆகவே, நேற்று மாலை 4 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவும் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின்நீர்இருப்பு 2,823 மில்லியன் கனஅடியாகவும் நீர்மட்டம் 34 அடியாகவும் உள்ளது.

அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 763 கனஅடி, புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு100 கனஅடி என உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

நீர்திறப்பு நிறுத்தம்: இதனிடையே ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் மற்றும் கிருஷ்ணாபுரம் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஆந்திராவின் நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பிச்சாட்டூர் அணை 1.85 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. தொடக்கத்தில் விநாடிக்கு 500 கனஅடியாக உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 16-ம்தேதி முதல் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கன அடியாக குறைந்ததால் ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகள், நேற்று முன் தினம் இரவு பிச்சாட்டூர் அணையிலிருந்து, உபரி நீரை திறப்பதை நிறுத்திவிட்டனர் என தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், ஆந்திர மாநிலம்- சித்தூர் மாவட்டத்தில் 199.27 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து கடந்த 14-ம் தேதி இரவு 9 மணி முதல் விநாடிக்கு 173 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கும் நீர்வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம் இங்கிருந்தும் உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x