Published : 17 Dec 2022 03:58 AM
Last Updated : 17 Dec 2022 03:58 AM

டெல்டா உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் 20-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 20-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது 17-ம் தேதி தெற்கு வங்கக் கடலில் நிலை கொள்ளும். பின்னர் தமிழகம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 17, 18 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19, 20-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 20-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும். 16-ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தெற்கு அந்தமான், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ம் தேதியும், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 18, 19, 20-ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x