Published : 13 Dec 2022 04:33 AM
Last Updated : 13 Dec 2022 04:33 AM

நடப்பாண்டில் ரூ.2,050 கோடி செலவில் 16 ஆயிரம் கி.மீ. மின்வழித் தடம்: தமிழக மின்வாரியம் திட்டம்

சென்னை: மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டத்தின்கீழ், தமிழகத்தில் நடப்பாண்டில் ரூ.2,050 கோடி செலவில் 26,000 மின்விநியோக மின்மாற்றிகள், 16 ஆயிரம் கி.மீ. மின்வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் மின்இழப்பை பூஜ்ஜியமாகக் குறைக்க மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோக திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

5 ஆண்டுக்குள் முடிக்க திட்டம்: தமிழகத்தில் ரூ.10,790 கோடி செலவில் இத்திட்டத்தைச் செயல்படுத்த மின்வாரியத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், ரூ.8,600 கோடி மத்திய அரசு சார்பில் கடனாக வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்குள் பணி முடித்துவிட்டால், மொத்தக் கடன் தொகையில் 60 சதவீதம் மானியமாக வழங்கப்படும். எஞ்சிய 40 சதவீததொகையை மட்டும் செலுத்தினால்போதும். அதே சமயம், காலஅவகாசத்துக்குள் பணி முடிவடையவில்லை எனில், மொத்தக் கடன் தொகையும் வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் புதிய மின்வழித் தடங்களை அமைப்பது, அதிக தூரமுடைய வழித்தடங்களில் பழுது ஏற்படும்போது மொத்தமாக மின்விநியோகம் நிறுத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு 2 கி.மீ. தூரமும் சுவிட்ச்யார்டு கட்டமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற் கொள்ளவும், இப்பணிகளை 5 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டில் ரூ.2,050 கோடி செலவில் 26,000 மின்விநியோக மின்மாற்றிகள், 16 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு மின்வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை 33 சதவீதம் மின்வாரியமும், 67 சதவீதத்தை தனியார் நிறுவனங்கள் மூலமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x