கெல்லீஸ் - தரமணி வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி: 8 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்த திட்டம்

கெல்லீஸ் - தரமணி வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி: 8 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்த திட்டம்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம் - சிறுசேரிசிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் கெல்லீஸ் முதல் தரமணி வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்க 8 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் (டிபிஎம்) பயன்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இது வடக்கு, மத்திய,தென் சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும்.

மேலும், இந்த பாதையில் அடையாறு ஆறு, சேத்துப்பட்டு ஏரிக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை மிகப்பெரிய சவாலான பணியாக கருதப்படுகிறது. முதல்கட்டமாக, மாதவரம் பால்பண்ணை பகுதியில் முதல் சுரங்கம் துளையிடும் இயந்திரம் பயன்படுத்தும் பணி அக்டோபரில்தொடங்கியது. தற்போது, அந்தபகுதியில் அடுத்தடுத்து இரண்டுசுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த வழித்தடத்தில் கெல்லீஸ் - தரமணி வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்க 8 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி இந்த மாதஇறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு ஆற்றைகடந்து, அடையாறு பணிமனை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும்பணி நடைபெறும்.

இதற்காக, இவ்வழித்தடத்தின் 2-வது சுரங்கம் துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின் பாகங்கள் பசுமை வழிச்சாலைக்கு வந்துள்ளன. இவற்றை பூமிக்கு கீழே இறக்கி, ஒருங்கிணைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதன்பிறகு, சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும். அடுத்தடுத்து இரண்டு சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

கெல்லீஸ் முதல் தரமணி வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்க மொத்தம் 8 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரம் சீனா, ஜெர்மனி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. இந்தப்பணியில் எல் அண்டு டி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in