Published : 11 Dec 2022 07:53 PM
Last Updated : 11 Dec 2022 07:53 PM

அமெரிக்க உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்

அமெரிக்காவில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி (Ms.International World People's Choice Winner 2022) என்ற பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றுள்ளார். 14 வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி முதலிடம் பிடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா ..? என்ற கேள்விக்கு பதிலாக அவர் சாதித்துக்காட்டியுள்ளார். எளிய குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக திறமையால் ஆளுமை கொண்டவர்.

கடந்த ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார். இதோடு பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. தனது திறமையை உலமே அறிந்திட கடல் கடந்து பயணித்தார்.

தன்னுடைய வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ள பிளாரன்ஸ் ஹெலன் நளினி அடுத்ததாக நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார்.

உக்ரைன் போர் நெருக்கடிக்காக 250 பேரிடம் இருந்து 4,700 டாலர் அளவுக்கு நிதி வசூலித்து கொடுத்த பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சேவை நீண்டு கொண்டே செல்கிறது. மிகவும் பின் தங்கிய கிராம புறங்களில் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன், ‘வூமன் எம்பவர்மென்ட்’ (Women empowerment) அமைப்பின் தமிழகத்திற்கான தலைவராக உள்ளார். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருக்கும் பெண்கள் முன்னேறுவதற்கான தொழிற்சார்ந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறார். பெண்களால் சாதிக்க முடியும் என்பதால் கிராமப்புற பெண்களுக்கும், பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதே தனது இலக்கு என நெகிழ்ச்சியுடன் பிளாரன்ஸ் ஹெலன் நளினி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x