Published : 09 Dec 2022 04:05 AM
Last Updated : 09 Dec 2022 04:05 AM

புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: புயல், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் வருமாறு:

> கனமழையை எதிர்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள கடிதத்தில் உள்ள அறிவுரைகளை சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும்.

> கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்பு மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும்.

> பொதுமக்களுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்க வேண்டும். முன்னெச்சரிக்கை செய்திகள் TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் வழங்கப்பட வேண்டும்.

> பேரிடரின்போது போக்குவரத்தைச் சீரமைக்க போதிய காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.

> பாதிக்கப்படும் இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

> பலத்த காற்றால் விழும் மரங்களை உடனடியாக அகற்ற மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்க வேண்டும்.

> மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றை இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்புக்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.

> அவசர காலத்தில் தேவையான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.

> பாதிக்கப்படும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்க வேண்டும். சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

> தங்கு தடையின்றி குடிநீர் வழங்க போதிய ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.

> நிவாரண பொருட்களை எடுத்துச் செல்ல சீரான போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

> பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

> அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உபரிநீர் வெளியேற்றத்தின்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளிக்க வேண்டும்.

> நெடுஞ்சாலை, நீர்வள ஆதாரம், மின்வாரியம், தீயணைப்புத் துறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

> ‘மேன்டூஸ்’ புயல் 9-ம் தேதி இரவு கரையை கடக்க உள்ள நிலையில், மக்கள் தேவை யற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.

> அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

> கடற்கரைக்குச் செல்வதை, பலத்த காற்று வீசும்போது மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

> நீர்நிலைகள் அருகிலும், பலத்த காற்று வீசும்போது திறந்த வெளியிலும் ‘செல்ஃபி’ எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

> நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத் தும்போது, பொதுமக்கள் அதை ஏற்று நிவாரண முகாம்களில் தங்க வேண்டும்.

> அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

> மெழுகுவர்த்தி, கை மின்விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள், உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் உள்ளிட்டவை அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x