Published : 07 Dec 2022 09:28 PM
Last Updated : 07 Dec 2022 09:28 PM

கொடி நாள் நிதியாக ரூ.53.66 கோடி திரட்டி புதிய சாதனை: தமிழக அரசு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இவ்வாண்டு ரூ.53.66 கோடி கொடிநாள் நிதியாக திரட்டப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.10.32 கோடி கூடுதலாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் நாடு முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முப்படையினை சேர்ந்த வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூறவும். அவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான கொடி நாள் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் கொடி நாள் நிதி திரட்டப்பட்டதில் தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ரூ.43.34 கோடி நிதி திரட்டப்பட்டது. இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.53.66 கோடி கொடிநாள் நிதியாக திரட்டப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் சாதனையை விட ரூ.10.32 கோடி கூடுதல் ஆகும்.

தமிழக முதல்வர் இன்று (டிச.7) காலையில் கொடிநாள் 2022-க்கான நன்கொடையினை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, கொடிநாள் மலர் வெளியிட்டு கொடிநாள், நிதி அதிக அளவில் வாரி வழங்கிட தமிழக மக்களைக் கேட்டுக்கொண்டார்.

தமிழக ஆளுநரும் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை கொடிநாள் நன்கொடை வழங்கி, அதிக அளவில் கொடிநாள் நிதி வழங்கிட தமிழக மக்களை கேட்டுக்கொண்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x