Published : 06 Dec 2022 05:59 AM
Last Updated : 06 Dec 2022 05:59 AM

மெட்ரோ ரயில் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை: குறுகிய கால இலவச பயணத்திட்டம் விரைவில் அறிமுகம்

சென்னை: மெட்ரோ ரயில் வசதிகள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறுகிய கால இலவச பயணத் திட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல்கட்டம் நீட்டிப்பு திட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு, இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில்களில் தினசரி 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை பயணிக்கலாம். ஆனால், மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதிகளை பெரும்பாலான மக்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால், குறைந்த அளவு மக்கள்தான் பயணிக்கின்றனர். எனவே,மெட்ரோ ரயில் வசதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, குறுகிய கால பயணத் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கூறியதாவது: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 2026-ல் முடியும்போது, சென்னை புறநகர் பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். தினசரிலட்சக்கணக்கான மக்கள் பயணிப்பர்.

எனவே, மெட்ரோ ரயில்வசதிகள் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், மெட்ரோ ரயில் வழித்தடங்களை ஒட்டி உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு, மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேரில் சென்று மெட்ரோ ரயில் பயணம் மற்றும் வசதிகள்குறித்து விளக்கம் அளிக்கின்றனர்.

மெட்ரோ ரயில்களை அதிகமாக பயன்படுத்தாத பயணிகளை தேர்வுசெய்து, குறுகிய காலத்துக்கு இலவச பயணம் செய்யும் வகையில் புது திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அவர்களுக்கு 2 வாரங்கள் வரை மெட்ரோ ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படும். இதன் மூலமாக, மெட்ரோ ரயில்களில் புதிய பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x