Published : 08 Dec 2016 08:06 AM
Last Updated : 08 Dec 2016 08:06 AM

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு என்னவாகும்?

முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 66.65 கோடி சொத்து சேர்த்ததாக 1996-ல் திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து கடந்த 2014 செப்டம்பர் 24-ம் தேதி தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட் டோரை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 5-ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதனால் சொத்துக் குவிப்பு வழக்கு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது, ‘‘ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பில் வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இதில் ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளதால் அவரது பெயர் வழக்கிலிருந்து நீக்கப்படும். மற்ற மூவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும். இது வழக்கமான சட்டமுறைதான்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x