Published : 04 Dec 2022 06:32 PM
Last Updated : 04 Dec 2022 06:32 PM

அதிமுக செயல்படாமல் முடங்கியதற்கு ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே காரணம்: டிடிவி.தினகரன்

மதுரை: அதிமுக செயல்படாமல் முடங்கியதிற்கு ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர்தான் காரணம்,'' என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல்தொழில்நுட்ப மகளிரணி செயலாளர் இ.ரஞ்சிதம் இல்ல திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்கள் கோடீஸ்வரன் - ரஷ்மி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகிறது. போடாத ரோடுகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையாக இருப்பது தான் ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற கட்சி என கூறிக்கொண்டு இந்து மதத்திற்கு எதிராக பேசிவருகிறது திமுக.

திமுக அரசு தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும் மக்களவை தேர்தலில் மக்கள் பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் வசம் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர்.

நீதிமன்ற வழக்குகளால் அதிமுக செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் தான் காரணம். ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சினையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x