Published : 23 Dec 2016 11:36 AM
Last Updated : 23 Dec 2016 11:36 AM

தமிழக நீர்ப்பாசனத்துக்கு என தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்: விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

கடந்த 5 ஆண்டாக கர்நாடகத்தால் தமிழக விவசாயிகள் குறுவையை இழந்துவிட்டனர். அதைத்தாண்டி சம்பாவுக்கும் தண்ணீர்தர கர்நாடகம் முரண்டு பிடித்தாலும் இயற்கை நமக்கு கை கொடுத்து வந்த நிலையில், இவ்வாண்டு சராசரி மழையான 440 செமீ-க்கு பதில் 168 செமீ மழைதான் வடகிழக்குப் பருவமழையால் கிடைத்துள்ளது.

அதனால் அனைத்து கிராமப் புறங்களிலும் உள்ள குளம், குட்டைகளில் கால் நனையும் அளவுக்குக் கூட தற்போது தண்ணீர் இல்லை.

வரும் கோடைக்காலத்தை எப்படிச் சமாளிப்பது, கால்நடைகள் பராமரிப்புக்கு தேவையான தண்ணீருக்கு என்ன செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி பாதுகாப்பது என அனைத்து தரப்பினரும் கவலையடைந்துள் ளனர்.

அதேநேரத்தில் முறையாக மழை பெய்திருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தும் அளவுக்கு நீர்நிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுவரை முறையான நீர் நிர்வாகம் செய்யத் தவறியதுடன், இருக்கின்ற நீராதாரத்தைப் பாதுகாக்க அடிப்படை பராமரிப்பு களை கூட செய்யாத நிலையில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, நீர்ப்பாசனத் துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து விவசா யிகளிடையே நிலவுகிறது.

இதுகுறித்து கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சொன்ன திமுகவும், வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுகமுகவும் தேர்தலுக்குப் பின்னர் இதனை வலியுறுத்தவில்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுவிட்டதால், தனி அமைச்சகத்தை உருவாக்க அதிமுக அரசுக்கு மனமில்லை.

இதுகுறித்து பொதுப்பணித் துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் கூறியபோது, “வறட்சி காரணமாக காவிரி டெல்டாவில் இதுவரை 32 விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், அமைச்சர் ஒருவர் கூட காவிரி டெல்டாவின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யவில்லை. நீர்ப் பாசனத் துறை அமைச்சகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் பார்வையிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை, விவசாயிகளின் நன்மதிப்பை பெற இது ஒரு நல்ல தருணம் என்பதை உணர்ந்து நீர்ப் பாசனத் துறைக்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்

அப்படி நீர்ப் பாசனத் துறை அமைக்கப்பட்டால், அதன் மூலம் நீர்ப் பாசன கட்டமைப்புகளை வடிவமைத்தல், பராமரித்தல், உட்கட்டமைப்புகளை பாதுகாத் தல், பொறியாளர்களை ஒருங்கி ணைத்து திட்டப்பணிகளைச் செயல்படுத்துதல், அண்டை மாநிலங்களுடனான நீர் தாவாக் களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து அந்த அமைச்சகம் கவனம் செலுத்தும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x