Published : 20 Jul 2014 12:25 PM
Last Updated : 20 Jul 2014 12:25 PM

தமிழகத்தில் இந்த ஆண்டே எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்

‘மத்திய அரசின் திட்டப்படி, எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் இந்த நிதியாண்டிலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தை (எய்ம்ஸ்) தமிழகத்தில் அமைக்க 3 அல்லது 4 தோதான இடங்களை கண்டறிந்து கூறுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அதற்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக முதல் கட்டத்தி லேயே இந்த நிதியாண்டிலேயே அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய இடங்களில் தேவையான அளவுக்கு நிலங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட இடங்களில் போக்குவரத்து இணைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. மேலும், அந்த நிலங்களும் அரசின் வசமே உள்ளன.

மேற்கண்ட 5 இடங்களிலும், சிறப்பான குடிநீர் வசதி மற்றும் மின்வசதிகள் உள்ளன. தவிர சிறப்பான ரயில் சேவை வசதிகளும், அருகிலேயே விமான நிலையங்களும் அமைந்துள்ளன.

எய்ம்ஸ் போன்ற தரம் வாய்ந்த மருத்துவமனை தமிழகத்தில் அமைந்தால், சிறந்த மருத்துவக் கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதற்கு மேலும் வலுக்கூட் டுவது போல் அமையும். மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிநவீன வசதிகளைக் கொண்ட, அரசே நடத்தும் பன்னோக்கு மருத்துவமனை மூலம் சிறப்பான சிகிச்சை கிடைக்கவும் வழி ஏற்படும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெய லலிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x