Published : 26 Nov 2022 06:30 AM
Last Updated : 26 Nov 2022 06:30 AM

இஓஎஸ் - 06 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: புவி கண்காணிப்புக்கானஇஓஎஸ் - 06 உட்பட 9 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி54 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 என்றநவீன செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக் கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் மூலம் இன்று (நவ.26) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்-டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த ராக்கெட் மூலமாக இஓஎஸ்-06 மட்டுமின்றி, அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் (4), துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் (2) மற்றும் ஐஎன்எஸ்-2பி, பிக்சல் நிறுவனத்தின் ஆனந்த் என 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

இஓஎஸ்-06 செயற்கைக் கோள் 1,117 கிலோ எடை கொண்டது. இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கும்.

இதுதவிர ஐன்எஸ்-2பி செயற்கைக் கோள் இந்தியா - பூடான் ஆகிய நாடுகளின் கூட்டிணைப்பில் தயாரிக்கப்பட்டது. கடந்த 2019-ல்பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பூடான் சென்றபோது, இரு நாடுகள் இடையே செயற்கைக் கோள் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில் தற்போது ஐஎன்எஸ்-2பி செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளதாகவும், இது பூடானை வலம்வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 8 நானோ செயற்கைக் கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x