Published : 23 Nov 2022 06:35 AM
Last Updated : 23 Nov 2022 06:35 AM

‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின்கீழ் ஆவடியில் 211 பேருக்கு பணி நியமன ஆணை: எல்.முருகன் வழங்கினார்

மத்திய அரசின் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ், ஆவடியில் 211 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம்,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வழங்கினார். இந்நிகழ்வில், சிஆர்பிஎப் ஏடிஜிபி சஞ்சீவ் ரஞ்சன் ஒஜா, டிஐஜி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்: மத்திய அரசின் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ், ஆவடியில் 211 பேருக்கு பணி நியமன ஆணைகளை நேற்று மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைஇணையமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.

மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடிநேற்று காணொலி காட்சி வாயிலாக 71,056 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து, நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் (குஜராத், இமாச்சலப் பிரதேசம் தவிர) நடந்த நிகழ்ச்சிகளில் மத்தியஅமைச்சர்கள் பங்கேற்று, அந்தந்தமாநிலங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

அந்த வகையில், சென்னை அருகே ஆவடி சிஆர்பிஎப் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் எல். முருகன் பங்கேற்று, 211 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நியமன ஆணைகள், மத்திய ரிசர்வ் போலீஸ்படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை, வருமானவரித் துறை, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், தபால் மற்றும் தெற்கு ரயில்வே துறை, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள் என, 14 துறைகளின் பணியிடங்களுக்காக வழங்கப்பட்டன.

இந்த பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்கள், தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, பணி நியமன ஆணைகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துதெரிவித்த அமைச்சர், அவர்களுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு என்ன சொன்னாரோ, அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில், ‘ரோஜ்கார் மேளா’ திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நூறாவது சுதந்திர தினத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்த காலத்தில், நாட்டை வடிமைக்கும் பணியாளராக, சேவை செய்யும் பணியாளராக நாம் இருக்கப் போகிறோம்.

உலகத்துக்கு வழிகாட்டி நாடு:

2047-ம் ஆண்டு இந்தியா வலிமை பெற்ற நாடாக, வல்லரசு நாடாக, உலகத்துக்கு வழிகாட்டி நாடாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு. அந்த கனவில், லட்சியத்தில் நாம் இருக்கப் போகிறோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நூறாவது சுதந்திர தினஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும். அதை நோக்கி நம் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிஆர்பிஎப் தெற்கு மண்டல ஏடிஜிபி சஞ்சீவ் ரஞ்சன் ஒஜா, ஆவடி சிஆர்பிஎப் குரூப் சென்டர் டிஐஜி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x