Published : 23 Nov 2022 12:21 AM
Last Updated : 23 Nov 2022 12:21 AM

கரூர் | செங்கல் சூளையில் சத்தீஸ்கரில் மாயமான 3 சிறுமிகள் உட்பட கொத்தடிமை தொழிலாளர்கள் 14 பேர் மீட்பு

கரூர்: சத்தீஸ்கர் காப்பகத்தில் மாயமான 3 சிறுமிகள் உள்ளிட்ட 8 குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 14 பேர் கரூர் மாவட்டம் வளையல்காரன்புதூர் செங்கல் சூளையில் மீட்கப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகளை அண்மையில் அங்கிருந்து காணவில்லை. இவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமிழகத்தில் இருப்பதாக தனிப்படையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து சத்தீஸ்கரில் இருந்து குழந்தை நல அலுவலர், போலீஸார் அடங்கிய குழுவினர் கரூர் மாவட்டத்திற்கு இன்று (நவ. 22) வந்தனர்.

தமிழக சமூக பாதுகாப்புத்துறை தனித் துணை ஆட்சியர் சைபுதீன் தலைமையில் போலீஸார் சத்தீஸ்கர் குழுவினருடன் கரூர் மாவட்டம் வளையல்காரன்புதூரில் உள்ள தனியார் செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் கடந்த 20ம் தேதி தேவா என்ற தரகர் சத் தீஸ்கரில் காணாமல் போன 3 சிறுமிகளை இங்கு கொண்டு வந்து விட்டது தெரியவந்தது. மேலும், 14 வயதுக்கு கீழ் உள்ள ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர், கொத்தடிமைகளாக இருந்த 2 ஆண்கள் உள்ளிட்ட 6 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பது தெரியவந்தது. இறுதியாக அந்த 14 பேரும் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இங்கு மீட்கப்பட்ட 3 சிறுமிகளில் ஒருவரின் சகோதரி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருப்பது தெரியவந்ததை அடுத்து சத்தீஸ்கர் குழு சிறுமியை மீட்க திருச்செங்கோடு சென்றது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செங்கல் சூளையில் மீட்கப்பட்ட 14 பேரும் கரூர் தனியார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, செங்கல் சூளை பங்குதாரர்கள், சிறுமிகளை இங்கு கொண்டு வந்த விட்ட தரகர் தேவா ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x