Published : 21 Nov 2022 01:44 PM
Last Updated : 21 Nov 2022 01:44 PM

வானிலை முன்னறிவிப்பு: 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்றும், 4 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவ.21) காலை 8.30 மணி அளவில் காரைக்காலில் இருந்து கிழக்கு - வட கிழக்கே சுமார் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு - தென் கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு - வட மேற்கு திசையில், தெற்கு ஆந்திர, தமிழக, புதுவை, கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும்.

இதன் காரணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (நவ.22) வட தமிழகம், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 - 23 என்ற அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 22ம் தேதி காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x