Published : 18 Nov 2022 03:46 AM
Last Updated : 18 Nov 2022 03:46 AM

எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள்: ஆறு பேரை புழல் சிறையில் அடைக்க உத்தரவு

படவிளக்கம்: ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேர். 

ராமநாதபுரம்: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரை சென்னை புழல் சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில்உள்ள இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துக் கப்பலில் கடந்த 14-ம் தேதி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் 4 படகுகளை மடக்கி பிடித்தனர். அவற்றில் 2 படகுகள் இலங்கையைச் சேர்ந்தவை, மற்றவை 2 படகுகள் தூத்துக்குடியைச் சேர்ந்தவை என தெரியவந்தது. இலங்கை படகுகளில் இலங்கை புத்தளம் மாவட்டம் கல்பட்டியைச் சேர்ந்த ரணில்சமரா(30), சேகன் ஸ்ரீவான்(24), உடாராஹசன்(27), சஞ்ஜீவா(30), சங்கல்ப ஜீவன்தா(19), சுதீஷ் சஞ்ஜீவா(19) ஆறு மீனவர்கள் இருந்தனர்.

தூத்துக்குடி படகுகளில் 3.7 டன் பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த வைத்திருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து இலங்கை மீனவர்கள் மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் ஆகியோரை பிடித்து, கடந்த 15-ம் தேதி இரவு தூத்துக்குடி சுங்கத்துறையிடம் இந்திய கடலோர காவல்படையினர் ஒப்படைத்தனர்.

சுங்கத்துறையினர்விசாரணை செய்தபின், இலங்கை மீனவர்களை தூத்துக்குடி தருவைகுளம் மெரைன் போலீஸில் ஒப்படைத்தனர். மெரைன் போலீஸார் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இந்நிலையில் இலங்கை மீனவர்கள் 6 பேரையும் நேற்று ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை டிசம்பர் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்க தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.கவிதா உத்தரவிட்டார். அதனையடுத்து இலங்கை மீனவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்கு இலங்கை மீனவர்கள் அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x