Last Updated : 19 Nov, 2016 02:42 PM

 

Published : 19 Nov 2016 02:42 PM
Last Updated : 19 Nov 2016 02:42 PM

ஏமாந்தவர்களை மீண்டும் ஏமாற்றும் கும்பல்: ரூ.100 கோடி நிதி நிறுவன மோசடியில் மதுரையில் மேலும் இருவர் கைது

மதுரையில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன வழக்கில் பெண் உட்பட மேலும் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரை காளவாசல் பகுதியில் கடந்த 2009-ல் எம்ஆர்டிடி என்ற பெயரில் தனியார் நிதிநிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் நிர்வாக இயக்குநராக சுரேஷ் பாஷா என்பவர் இருந்தார். இவரது தலைமையில் 4 இயக்குநர்கள், ஊழியர்கள் செயல்பட்டனர். இங்கு முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும் என, கவர்ச்சி விளம்பரம் அறிவித்தனர். மேலும், நிதிநிறுவனத்தில் முதலீடுகளை சேகரிக்க மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட தமிழகம் முழுவதும் முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மூலமும் தனிநபர் என, பல்லாயிரக்கணக்கானோர் தங்களது தகுதிக்கேற்ப முதலீடுகளை செய்தனர்.

கடந்த 2014 அக்டோபரில் இந்த நிதிநிறுவனம் திடீரென மூடப்பட்டது. நிர்வாக இயக்குநர், இயக்குநர்கள் மற்றும் ஊழியர்கள் தலைமறைவாகினர். இத்தகவலை அறிந்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்டோர் காவல் நிலையங்களில் திரண்டனர். மதுரை விசுவநாதபுரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக எம்ஆர்டிடி நிறுவனம் மற்றும் அதன் 3 துணை நிறுவனங்கள், நிர்வாக இயக்குநர் சுரேஷ்பாஷா உட்பட 17 பேர் மீது பொருளாதார காவல் ஆய்வாளர் முத்துமாரி வழக்கு பதிவு செய்தார். விசாரணையில், ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. தமிழகம் மற்றும் பெங்களூரு உட்பட வடமாநிலங்களில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன.

பொருளாதார குற்றப்பிரிவு பெண் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாமணி, ஆய்வாளர் தர்மர் அடங்கிய தனிப்படையினர் சுரேஷ் பாஷா உள்ளிட்ட குற்றவாளிகளை தேடினர். ஏற்கெனவே மூவர் கைது செய்யப்பட்டனர். மூவர் முன்ஜாமீன் பெற்றனர். இந்நிலையில் நிதிநிறுவனத்தில் இயக்குநராக இருந்த மதுரையைச் சேர்ந்த ராமரத்தினம் என்பவரின் மனைவி ராஜலட்சுமி (46), காசிவிசுவநாதன் மகன் வெங்கட்ராமன் (50) ஆகியோரை டிஎஸ்பி ராஜாமணி தலைமையிலான தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடுகின்றனர்.

டிஎஸ்பி ராஜாமணி கூறியது: இந்நிறுவனம் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுவரை வரப்பெற்றுள்ள புகார்களின் அடிப்ப டையில் மோசடி தொகை ரூ.58 கோடி என்றாலும், அந்நிறுவனம் ஏமாற்றியது சுமார் ரூ.100 கோடியை தாண்டும் என தெரிகிறது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் தரலாம்.

இந்நிறுவனத்தில் முகவர்களாக பணிபுரிந்த சிலர் ஏற்கெனவே ஏமாந்த முதலீட்டாளர்களை மீண்டும் ஏமாற்றுவது தெரிகிறது. முதலீட்டாளர்களிடம் பணம் வாங்கி தருவதாகவும், வேறு பத்திரம் தருவதாகவும் கூறி ஒரிஜினல் பத்திரங்களை முகவர்கள் வாங்கி ஏமாற்றுகின்றனர்.

பணம் கிடைத்துவிடும் என்ற ஆசையில் முதலீட்டாளர்களும் பத்திரங்களை கொடுத்து ஏமாறுகின்றனர். இது தொடர்பாக சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரிஜினல் பத்திரம் இன்றி புகார் கொடுக்க முடியாது. எனவே ஏமாந்த முதலீட்டாளர்கள் யாரிடமும் தங்களது அசல் பத்திரங்களை தந்துவிட வேண்டாம். ஏமாற்றி வாங்க முயற்சித்தால் அவர்கள் மீது புகார் கொடுக்கலாம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x