Published : 11 Nov 2022 03:54 PM
Last Updated : 11 Nov 2022 03:54 PM

1,107 நகரப் பேருந்து கொள்முதலுக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 1,107 நகரப் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய 1,107 நகர பேருந்துகள் உள்பட 1,771 பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதி டெண்டர் கோரப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி மீட்டர் உயர தளத்துடன் நகர பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு பதில் 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது சட்டவிரோதமானது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்துக்கு முரணாக இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டும் இதேபோல பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரிய போது அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சட்டப்படி பேருந்துகளை கொள்முதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 900 மில்லிமீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்தில் மாற்றுத் திறனாளிகளால் ஏற முடியாது என்பதால், 1,107 பேருந்துகள் கொள்முதல் தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x